மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர், கடும் நிபந்தனைகளுடன் இன்று (11) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி முன்னிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, தேரரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பு செங்கல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உள்ளிட்ட ஐவர் நுழைந்து, அங்கு கடமையாற்றிய அரச ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 7ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணையின்போது, இனிமேல் எந்தவொரு அரச திணைக்களத்திற்கும் சென்று அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்படக்கூடாது என்றும், வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் நீதவான் தேரருக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக தலைமறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிபந்தனைகளை மீறினால் பிணை இரத்து செய்யப்பட்டு, வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படலாம் எனவும் நீதவான் எச்சரித்தார்.
இதனையடுத்து, அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

அதேவேளை, இன்று கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கை அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டார்.









