கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 29 மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம். றிஸானா தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக அல்-மீஸான் பௌண்டஷன் – ஸ்ரீலங்கா தவிசாளர் நூருல் ஹுதா உமர் கலந்து கொண்டார்.
கல்முனை கல்வி வலயத்தில் சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்த இப்பாடசாலை, இவ்வாண்டு 96 சதவீத சித்தியை பெற்றுள்ளதுடன், 136 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சாதனை மாணவர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் பெறுபேற்றுக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.
இதன்போது பிரதம அதிதி, கௌரவ அதிதி உள்ளிட்ட அதிதிகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினர்.
நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
























