அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளுக்கு எதிராக அனைத்து இன மக்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.
பத்திரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் விடுத்த கோரிக்கை மற்றும் கட்சியின் அரசியல் பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்கவுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தனிப்பட்ட அல்லது கட்சி நலன்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நாட்டினதும் தேசிய பாதுகாப்பினதும் நலனை உறுதிப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னிறுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்த விமல் வீரவன்ச, விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தும் நோக்கில் நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ, கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
நிலக்கரி மற்றும் அரிசி இறக்குமதி, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் இடம்பெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்தியாவுடன் பல இரகசிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலைக்கிடமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசியல்வாதிகளை கண்காணிப்பதில் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், நீதிமன்றத் தீர்ப்புகளின் ஊடாக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பான தீர்மானங்கள் மறுபரிசீலனை செய்யப்படுவதால், அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அதிகாரம் நடைமுறையில் கேள்விக்குறியாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து இன மக்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என விமல் வீரவன்ச மேலும் அழைப்பு விடுத்தார்.







