முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ளதாக சர்வதேச நிதி நிறுவனம் (IIF) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், கடன் மறுசீரமைப்புக்குப் பின்னர் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு இது முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் 37.33 ஆக இருந்த இலங்கையின் முதலீட்டாளர் உறவுகள் தொடர்பான மொத்த மதிப்பெண், 2026ஆம் ஆண்டில் 43.67 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், மதிப்பீடு செய்யப்பட்ட 57 வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடையும் பொருளாதார நாடுகளில் முதல் 25 சதவீதத்துக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.
முதலீட்டாளர் உறவுகள் மதிப்பீட்டில் 6.3 புள்ளிகள் முன்னேற்றம் பதிவுசெய்த இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக முன்னேற்றம் கண்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
கடன் வெளிப்படைத்தன்மை நடைமுறைகளிலும் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டில் 19ஆவது இடத்தில் இருந்த நாடு, 2026ஆம் ஆண்டில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் தகவலின்படி, கடன் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக வெளியிடுதல், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) தரவுகளை முறையாகப் பகிர்ந்துகொள்ளுதல், முதலீட்டாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள், இலங்கையின் சர்வதேச நம்பகத்தன்மையை உயர்த்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் முதலீட்டாளர் நம்பிக்கையையும் அரச பத்திர முதலீடுகளையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் முதலீட்டு தேவைகளால், கடன் வெளிப்படைத்தன்மை வளர்ந்து வரும் நாடுகளின் கடன் செலவுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளதாக IIF தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.








