நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற பாரதூரமான வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த, ஹபரண, அனுராதபுரம், மதவச்சி மற்றும் ஹக்மண ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே குறித்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கிரிந்த – விலமுல்ல:
கிரிந்த–திஸ்ஸமஹாராம வீதியில் மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில், கெகிராவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹபரண – அலுத் ஓயா:
ஹபரண–கந்தளாய் வீதியில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் – சாலியபுர:
அனுராதபுரம்–ரம்பேவ வீதியில் முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த 25 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்துள்ளார்.
மதவச்சி – கிரிகல்வெவ:
ஹொரவப்பொத்தான–மதவச்சி வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றுமொரு பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹக்மண – கரதொட்ட:
ஹக்மண–கரதொட்ட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி சறுக்கிச் சென்று மின்சாரக் கம்பத்தில் மோதியதில், ஹக்மண பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த அனைத்து விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







