ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குப் புதிய வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேக நபருக்குப் பிணையாளர்களாகத் தோன்றிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவருக்குப் பிணை நின்ற அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி, இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினாலேயே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதன் காரணமாகவே அவர்களால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை எனத் தெரிவித்தார்.
எனினும், தாயாரின் மறைவு குறித்து நீதிமன்றத்துக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கப்படாததால், பிடியாணையைத் திரும்பப் பெறும் சந்தர்ப்பத்தில் அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.







