2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சையில் இடம்பெறக்கூடிய வினாக்கள் எனக் கூறி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரப்புதல் ஆகிய நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், பரீட்சை வினாக்கள் அல்லது அதனை ஒத்த வினாக்களை வழங்குவதாக விளம்பரப்படுத்தி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் மின்னணு, அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியனவும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விளம்பரப் பொருட்களை வைத்திருப்பதும் சட்டவிரோதமானதாகும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.








