தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண, தமனயாய பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தாயும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்துள்ளது.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த உந்துருளியுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுந்தேவ பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், உந்துருளியில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த குடும்பத்தினர் விபத்தில் சிக்கியுள்ளனர்.
தமனயாய பகுதியில் உந்துருளி திரும்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில், பின்னால் வந்த பேருந்து அதன்மீது மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உந்துருளியில் பயணித்த 63 வயதுடைய தாயாரும், அவரது 43 வயதுடைய மகனும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உயிரிழந்த நபருடன் பயணித்த ஒன்றரை வயதுடைய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பகமூண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதி பகமூண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான சரியான காரணம், பேருந்தின் வேகம் மற்றும் உந்துருளி திரும்பிய விதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








