க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இன்று (14) நடைபெறவுள்ள இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சார்த்திகள் தேவையற்ற அச்சம் அல்லது பதற்றம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கேட்டுக்கொண்டுள்ளார். பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மையத்தில், இன்று நடைபெறவுள்ள இயற்பியல் பாடத்தின் முதல் வினாத்தாள்கள் அடங்கிய ஆறு பொட்டலங்கள் நேற்று (13) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு தொடர்பான செய்திகள் பரவின.
எனினும், குறித்த வினாத்தாள் பொட்டலங்கள் எவ்விதத்திலும் திறக்கப்படவில்லை என்றும், அவற்றின் உள்ளடக்கங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, பரீட்சார்த்திகள் சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல், எவ்வித அச்சமுமின்றி வழக்கம்போல் பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








