களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் புலத்சிங்கல பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண் ஒருவரை குறித்த இளைஞர்கள் கேலி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய கணவன், அவரது மனைவி மற்றும் 19 வயதுடைய அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் பணியை முடித்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர்கள் அவரை கேலி செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவன், இளைஞர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

எனினும், பின்னர் குறித்த இளைஞர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தம்பதி இளைஞர்கள் மீது பெட்ரோல் போத்தலை வீசி தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் முதலில் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சந்தேகநபர்களின் வீட்டைத் தாக்கியதுடன், அங்கிருந்த சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







