செம்மணி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள் காணாமல்போனவர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தடயவியல் மற்றும் தொல்லியல் சார்ந்த நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டு வருவதாக காணாமல்போனவர்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனிதப் புதைகுழிகள் தொடர்பான நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், ஒவ்வொரு புதைகுழிக்கும் தனித்துவமான வரலாற்றுப் பின்னணி இருப்பதால், அவற்றை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து முடிவுகளுக்கு வர வேண்டியுள்ளதாகவும் அந்த அலுவலகத்தின் குழு உறுப்பினர் டி. யோகாராஜா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், கொக்குத்தொடுவாய், குருக்கல்மடம், மன்னார் சதொச மற்றும் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு இடையே பல்வேறு சம்பவத் தொடர்புகள் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மனிதப் புதைகுழியிலும் காணப்படும் எச்சங்களின் காலப்பகுதி, தடயவியல் மற்றும் தொல்லியல் தகவல்கள், சமூக மற்றும் மானுடவியல் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குருக்கல்மடம் மனிதப் புதைகுழி தொடர்பில் ஏற்கனவே பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதால், அங்கு மீட்கப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் சில முடிவுகளுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அவை காணாமல்போனவர்களுடன் தொடர்புடையவையா என்பது குறித்தும் ஓரளவு தெளிவைப் பெற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளில் உள்நாட்டு நிபுணர்களின் உதவி பெறப்படுவதுடன், மேலதிக நிபுணத்துவம் மற்றும் பயிற்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்தும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படுவதாக யோகாராஜா தெரிவித்தார்.
குழந்தைகளின் எலும்புக்கூடுகளின் வயதை மதிப்பிடுதல், எலும்புகள் புதைக்கப்பட்டு எவ்வளவு காலம் கடந்துள்ளது என்பதை கண்டறிதல் உள்ளிட்ட விடயங்களில் சம்பந்தப்பட்ட நிபுணர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு உள்ளிட்ட ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட முறையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டவை அல்ல எனவும், மனிதப் புதைகுழிகள் தொடர்பில் பல்வேறு அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, சம்பூர் மற்றும் மாத்தளை உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தனிப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான வழக்குகளும் பிரத்தியேகமாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மக்களை சந்தித்த சந்தர்ப்பங்களில் சர்வதேச விசாரணைகளை கோரியுள்ளதாகவும், அதேவேளை உள்ளூர் பொறிமுறையொன்றின் ஊடாக விரைவானதும் சிறந்ததுமான தீர்வை வழங்க முடியுமா என்பது குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் யோகாராஜா தெரிவித்தார்.
எனினும், குற்றவியல் நீதி விசாரணை பொறிமுறைகளில் தலையிடுவதற்கான அதிகாரம் காணாமல்போனவர்களுக்கான அலுவலகத்திற்கு இல்லை என்றும், காணாமல்போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் மட்டுமே அந்த அலுவலகத்தால் ஆராய முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதுவரை காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் 23,352 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காணாமல்போனவர்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.








