கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான முதலாம் வகுப்பு பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள் திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் கடந்த 12ஆம் திகதி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாம் வகுப்புக்கான 19,892 தமிழ் செய்முறைப் பாடநூல்கள் மற்றும் பாடநூல்கள் உரிய விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே 4ஆம் திகதி குறித்த புத்தகத் தொகுதியை ஒப்பந்த நிறுவனமொன்றிடம் கொண்டு செல்வதற்கு கல்வி வெளியீடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டபடி விநியோகிக்கப்பட வேண்டிய 12 விநியோக மையங்களுக்கும் குறித்த பாடநூல்கள் சென்றடையவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் வகுப்பின் மூன்றாம் தவணைக்காக விநியோகிக்கப்பட வேண்டிய சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகத் தொகுதியே இவ்வாறு விநியோகிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








