சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO முன்னெடுத்துவரும் தணிக்கை மற்றும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பிலும் குறித்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் ICAO செயல்பட்டு வருவதாகவும், அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாக தமது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் விமானப் போக்குவரத்து தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக பேணப்படுகின்றனவா என்பதை மதிப்பீடு செய்வதற்காக தணிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான தணிக்கையின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையிலும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தணிக்கை நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்பார்க்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலை தொடருமானால், சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிக்கப்படும் அபாயம் உருவாகக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.








