கடுவெல பகுதியைச் சுற்றி இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் வருடாந்த தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் பெரஹெரா ஊர்வலம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.
தேவாலயத்திற்கு அருகில் ஆரம்பமாகும் ஊர்வலம், 143 அவிசாவளை – கொழும்பு பிரதான பேருந்து வீதி ஊடாக கடுவெல ராஜசிங்க பாலத்தை கடந்து பண்டாரவத்தை மற்றும் பியகம பகுதிகளுக்குச் செல்லவுள்ளது.
தீர்த்த உற்சவ சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அதே வழியாக மீண்டும் கடுவெல சந்தியை கடந்து தேவாலயத்தை சென்றடையவுள்ளது.
இதனால், ஊர்வலம் நடைபெறும் காலப்பகுதியில் குறித்த வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் போது, சாரதிகள் 697 பேருந்து வீதி – பட்டியவத்தை வீதி வழியாக 177 கடுவெல – கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைந்து, ராஜசிங்க மாவத்தை ஊடாக மீண்டும் 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதியை சென்றடைய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.








