வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாடு தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவி திருமதி அ. அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், மதகுருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் நோக்கம், அதன் நிகழ்ச்சி நிரல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் கோரப்பட்டது.
உள்ளகப் பொறிமுறைகள் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ள காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் கோரிக்கைகளை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்வதும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதும் மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் போராட்டத்தின் போது உயிரிழந்த தாய்மார்களின் அனுபவங்கள் மற்றும் சாட்சியங்களை ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் கலந்துரையாடல்கள், சிறப்புரைகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கு மற்றும் சர்வதேச மட்டத்தில் ஆதரவைத் திரட்டும் வகையில் மாநாடு அமைய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



























