வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையால், அவசரகாலங்களில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பணியாற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் மிருகக்காட்சிச்சாலை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக சேவை நேரக் கொடுப்பனவு மற்றும் அபாயக் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜூன் 1ஆம் திகதி முதல் குறித்த கால்நடை வைத்தியர்கள் சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பணியாற்றும் முறையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரண்டரை மாதங்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தும் தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என சங்கத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







