22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் ஆகிய இரண்டும் இன்று (18) நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65இலிருந்து 67ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63இலிருந்து 65ஆகவும் அதிகரிக்கப்படும்.
அதேவேளை, நீதித்துறை (திருத்த) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 ஆக நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில், குறித்த இரண்டு சட்டமூலங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (17) நடைபெற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதுடன், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதிபதிகளையும் உள்ளடக்கிய முழு அமர்வை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








