இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கும் இவ்விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே ஜம்மு காஷ்மீர், லடாக், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக சுமார் 3,488 கிலோமீற்றர் நீளமான எல்லை காணப்படுகிறது.
எல்லையின் பெரும்பாலான பகுதிகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், இரு தரப்பினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பிலும் இதுவரை முழுமையான உடன்பாடு எட்டப்படவில்லை.








