முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (18) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்திரகாந்தன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி முருகன் கோயிலுக்கு அருகில் முன்னாள் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபராக சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.








