உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புடன் முரண்படுவதாகத் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆக உயர்த்தவும் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதம நீதியரசரின் பதவிக்காலம் தொடர்பிலும் புதிய ஏற்பாடு முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் போது அல்லது பதவியேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடையும் போது, இவற்றில் எது முதலில் இடம்பெறுகிறதோ அந்த சந்தர்ப்பத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த மாற்றங்கள் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சட்டத்தரணிகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கவலை வெளியிட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்தத் திருத்தம் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








