வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் ‘சமித்புர சத்து’ என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘சமித்புர சத்து’ என அழைக்கப்படும் திமுத்து சதுரங்க பெரேரா, மட்டக்குளி – சமித்புர பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்றும் 12 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓமானுக்குத் தப்பிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகத் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி எனக் கருதப்படமாட்டார்.








