பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தச் சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு இந்தத் திருத்தச் சட்டமூலம் முன்மொழிந்திருந்தது.
இதன்படி, குறித்த குற்றங்களுக்கான அபராதத் தொகை தற்போதுள்ள 10,000 ரூபாவிலிருந்து அதிகபட்சமாக 100,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த சட்டத்தின் கீழ் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்தவொரு தொழிலிலும் ஈடுபடுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்குட்பட்டதுமான இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் போது முதலாளிகள் பின்பற்ற வேண்டிய விசேட ஒழுங்குமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.








