மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன, களு பாலம் பகுதியில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று எதிர்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின்போது உழவு இயந்திரத்தில் 10 பேர் பயணித்ததாகவும், அவர்களில் எட்டு பேர் பலத்த காயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய மூவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








