சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை பியுமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையான முறையில் பதிலளித்துள்ளார்.
“என்னை வீழ்த்துவது கடினம், நான் கீழே விழுந்து எழுந்த பெண்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் இல்லாத நிலையில் காலையில் விழித்தபோது சில முகநூல் பக்கங்கள் தன்னை வைத்துப் போலிச் செய்திகளைப் பரப்புவதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஷிரான் பாசித் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும், துபாயில் நடந்த நிகழ்வொன்றில் பத்ம என்பவரை மட்டுமே சந்தித்ததாகவும், அவருடன் எவ்வித பணப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தான் உழைத்த பணம் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரத்தின் மூலமே தான் முன்னேறியதாகவும் தெரிவித்துள்ள அவர், போதைப்பொருள் மற்றும் கருப்புப் பணத்தின் தேவை எனக்கில்லை எனவும், பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.








