மத்திய பெருவில் நேற்று (20) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 99 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதுடன், அதன் மையம் ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள அனிசோ பகுதிக்கு வடமேற்கே சுமார் 31 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் அச்சமடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறிய போதிலும், உடனடியாக உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சேதங்கள் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் அதிக ஆழமே அதன் தாக்கத்தை குறைத்ததாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனத்தின் தலைவர் ஹெர்னாண்டோ டவேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் அளவை 7.2 ரிக்டர் என மதிப்பிட்டிருந்த நிலையில், USGS பின்னர் அதனை 6.7 ரிக்டர் என மதிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) பகுதியில் பெரு அமைந்துள்ளதால், அந்நாடு அதிக நில அதிர்வு அபாயம் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.








