சிறுநீரக நோயாளிகளுக்கான குருதி சுத்திகரிப்பு சிகிச்சை வசதிகளை வடக்கு மாகாணத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில், 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு டயாலிசிஸ் இயந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வழங்கிய இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளன.
இதற்கான வரித் தீர்வாக வடக்கு மாகாண சபையினால் 3.5 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வில், கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால், டயாலிசிஸ் சிகிச்சை வசதிகளை நோயாளிகளின் வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது அவர்களின் பயணச் சுமையையும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்க உதவும் என அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சிறுநீரக நோய் தொடர்பான ஆய்வுகள் மற்றும் சுகாதாரத் தரவுகளின் அடிப்படையிலான நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல காரணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிறுநீரக நோய்க்கு ஒரே ஒரு காரணியை மாத்திரம் பொறுப்பாக்குவது அறிவியல் ரீதியாக பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சிகிச்சை வழங்குவதுடன் மட்டுப்படாமல், சிறுநீரக நோய் அதிகரிப்பதற்கான காரணிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளுக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் சேவையையும் ஆளுநர் பாராட்டினார்.
ஆறு டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்படுவது மருத்துவ உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை மட்டுமல்ல; சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை வாய்ப்பையும், அவர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் வழங்கும் மனிதநேயப் பங்களிப்பாகும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.







