மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் சீட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியதாகக் கூறப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின்போது பெண்ணொருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அதன் சீட்டுக்குள் ஒரு பவுன் தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் 8,000 ரூபாய் பணத்தை வைத்து பூட்டியுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது நகைகளும் பணமும் காணாமல் போயிருந்ததை அவதானித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட தங்கச் சங்கிலியை காட்டுப் பகுதியில் புதைத்து வைத்ததாக சந்தேகநபர் தெரிவித்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் அது இதுவரை மீட்கப்படவில்லை. திருடப்பட்ட பணத்தை செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







