சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் 20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தளர்த்துவதற்காக இலஞ்சம் கோரி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்காமல், 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து குறைந்த தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக பணம் கோரப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனையிலும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இருவரையும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








