பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருவதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் அடிமைத்தனத்தைத் தடுக்கும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயற்படுவது அதிகரித்துள்ளதாகவும், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அறிமுகமாகும் போக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அவதானிப்புகள் கவலைக்குரிய நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருளை பயன்படுத்துவோர் அதனால் ஏற்படும் இன்பத்திற்காக மாத்திரமன்றி, பாவனையை நிறுத்தும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளைத் தவிர்ப்பதற்காகவும் தொடர்ந்து அதனை பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக கல்வியை இடைநடுவில் கைவிடும் ஆண் மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருள் சார்புடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இளைஞர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதுடன், மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என பேராசிரியர் அமில இசுரு வலியுறுத்தியுள்ளார்.







