கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்களைத் தாக்கி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் மேலும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மேலும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாகவும், சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்த அவர்களின் விசா காலம் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.








