15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரோ, சொகுசு கார் மூலம் நீதிபதிகள் மட்டுமே பயன்படுத்தும் விசேட வாயிலூடாக நீதிமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சனக அபேவிக்கிரம, “பொதுமக்கள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்படும் பிரதான நுழைவாயிலைத் தவிர்த்து, ஒரு சந்தேக நபர் எவ்வாறு விசேட வாயிலால் அனுமதிக்கப்படலாம்?” என நீதிமன்றத்தில் பலத்த கேள்விகளை எழுப்பினார்.
இந்த விதிமீறல் தொடர்பாக விசாரணை நடத்திய அனுராதபுரம் தலைமை நீதவான், நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறியை உடனடியாக நீதிமன்றக் கூண்டில் ஏறுமாறு உத்தரவிட்டார்.
விசேட பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான தர்மசிறியிடம், ஒரு சந்தேக நபருக்கு இத்தகைய சிறப்புச் சலுகை மற்றும் சொகுசு வசதி நீதிமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து நீதவான் கடுமையான விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் தலையீட்டால், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்லேகம ஹேமரத்ன தேரோ கைது செய்யப்பட்டார்.
பின்னர் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.








