நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்கான காரணம் தொடர்பில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில், நேபாள–சீன எல்லைப் பகுதியில் பனியாறு ஒன்று நிலநடுக்கத்தால் சரிந்து, திபெத்தில் உள்ள லெண்டேகோலா ஆற்றில் விழுந்ததன் காரணமாகவே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வுகளின் அடிப்படையில், நிலநடுக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனியாறு சரிந்ததன் விளைவாக ஏற்பட்ட பாரிய நிலச்சரிவே ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்வதற்கு காரணமாகி, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள–சீன திபெத் எல்லைப் பகுதிகளில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் பல பகுதிகளில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 170-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளப்பெருக்குடன் அதிகளவிலான மண் மற்றும் பாறைகளும் அடித்துச் செல்லப்பட்டதால், பல கிராமங்கள் சேற்றில் மூழ்கியுள்ளன. வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
சிட்வான் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நுவாகோட், தாடிங், கோர்கா, தனாஹுன் மற்றும் நவல்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க சேதங்கள் பதிவாகியுள்ளன.
இதனிடையே, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







