விடுமுறை நாட்களில் மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு தேசிய மின் தொகுதி இயக்குநர் (National System Operator – NSO) அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த திறனைக் கொண்ட கூரை சூரிய மின் அமைப்புகளின் மின் உற்பத்தி, ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடைநிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் தேசிய மின்சாரத் தேவை குறைவடையும் நிலையில், மின் தொகுதியின் சமநிலை மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்தத் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் வரும் கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள், அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மின் உற்பத்தியை நிறுத்தி, உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







