நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த உணவகத்தில் ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்று நிர்ணயிக்கப்பட்ட 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக, 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொள்வனவுக்கான முறையான பற்றுச்சீட்டைப் பெற்று அதனை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட நுகர்வோர் சட்ட மீறல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







