சூரியன் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, நாளை (28) முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை பிற்பகல் 12.11 மணியளவில் சூரியன் இலங்கையின் குறிப்பிட்ட பகுதிகளில் நேர் உச்சியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மேல் மாகாணம், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.







