கண்டி மாவட்டத்தில் நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீமிதிப்பு உற்சவம் நேற்று வியாழக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
அம்பாள்கோட்டை மகாவலி கங்கையில் வேல் பூட்டுதலுடன் பறவைக்காவடி நிகழ்வு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் அம்பாள்கோட்டை பிரதான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.
முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பறவைக்காவடி மற்றும் வேல் காவடி எடுத்தனர். வழியெங்கும் கூடியிருந்த பக்தர்களுக்கு அவர்கள் ஆசீர்வாதமும் வழங்கினர்.
இதனையடுத்து ஆலய வளாகத்தில் பாரம்பரிய முறையில் தீமிதிப்பு உற்சவமும் நடைபெற்றது.
கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம், நேற்று பறவைக்காவடி, தீமிதிப்பு மற்றும் இரவு இரதோற்சவத்துடன் சிறப்பாக இடம்பெற்றது.
மஹோற்சவத்தின் இறுதி நிகழ்வாக சனிக்கிழமை மகாவலி கங்கையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளது.











