இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான (Police Clearance Certificate) தரவுக் கட்டமைப்பு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் குறித்த சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இணையவழி தரவுக் கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த தரவுக் கட்டமைப்பு கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி நண்பகல் 12.50 மணி முதல் செயலிழந்திருந்த நிலையில், இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது சேவை மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான புதிய விண்ணப்பங்களை வழமைபோன்று இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.
எனினும், தரவுக் கட்டமைப்பு செயலிழந்ததன் காரணமாக ஆகஸ்ட் 20ஆம் திகதி முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட சில விண்ணப்பங்கள் தரவுக் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆகஸ்ட் 20ஆம் திகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணையவழி ஊடாக பொலிஸ் நற்சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீளச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர், பொலிஸ் நற்சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட 5,100 ரூபாய் கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்திய ATM அட்டையுடன் தொடர்புடைய கணக்கில் மீள வரவு வைக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.








