நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் முன்வைத்த கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி அனுப்பிய பதில் கடிதத்தின் மூலம் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், நீதித்துறை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குமே முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம் அல்ல என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

தலைமை நீதிபதியின் பதவிக்காலம் 67 வயது வரை அல்லது நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் வரை என வரையறுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், ஏனைய நீதிபதிகளுக்கான ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் மாற்றப்படவுள்ளது. அத்துடன், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளுக்கும் இந்த மாற்றங்களைப் பயன்படுத்துவது அரசியல் தலையீடாகக் கருதப்படக்கூடாது என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அனுபவமிக்க நீதிபதிகளை சேவையில் தொடர்ந்து வைத்திருப்பதற்கான தேவையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குறித்த சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் அரசாங்கம் முழுமையாக மதித்து செயற்படும் என உறுதியளித்துள்ளது.







