எதிர்காலத்தில் பொலிஸ் சேவையின் மனிதவளத்தை அதிகரிக்கும் வகையில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சேவையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொறுப்பான அமைச்சரிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து, 10,000 பேரை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 38,000 உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்தப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் பொலிஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடாந்தம் சுமார் 2,000 உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையிலிருந்து விலகுவதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், பொலிஸ் சேவையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வது அவசியமானதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







