குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பகுதியில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் பாரிய அளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹண ஓலுகலவின் உத்தரவு மற்றும் வழிகாட்டலின் பேரில், விசேட பொலிஸ் குழுவினரால் இன்று (31) இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 7,560,000 மில்லிலீற்றர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லிலீற்றர் கசிப்பு அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் எடையுடைய 04 எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கோடாவை காய்ச்சி தயாரிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தை அப்பகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








