மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த மூன்று பாலங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், பழுகாமம் – பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டமாக பழுகாமம் பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக 45 பேர் கொண்ட இந்திய இராணுவ தொழில்நுட்பப் பிரிவினர் இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவினருடனும், இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருடனும் இணைந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மகிழவெட்டுவான், பழுகாமம் மற்றும் மாவடிஓடை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த பாலங்கள் சேதமடைந்து, பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதனையடுத்து, குறித்த மூன்று பாலங்களையும் புனரமைத்துத் தருமாறு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கைக்கு அமைவாகவே தற்போது புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக பழுகாமம் – பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரு பாலங்களுக்கான கட்டுமானப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதும் அவற்றின் புனரமைப்பு பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் பொறியியலாளர் வேதநாயகம் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலங்கள் புனரமைக்கப்பட்டதன் பின்னர், வெள்ளக்காலங்களில் துண்டிக்கப்படும் போக்குவரத்து தொடர்புகள் மீண்டும் சீரடைவதுடன், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.














