நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, நீர்மின் திட்டங்களின் சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் திங்களன்று (01) தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்களின் உதவியுடன் நேபாள மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை பனி, பாறைகள், சேறு மற்றும் பெருமளவிலான சிதைவுப் பொருட்களுடன் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் கடும் அழிவை ஏற்படுத்தியதுடன், எல்லைக்கு அப்பால் சீனாவின் சில பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள அதிகாரிகள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 903 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,247 பேர் காணாமல் போயுள்ளனர்.
ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் அமைந்துள்ள 11 நீர்மின் திட்டங்களில் பணியாற்றியவர்களில் 933 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுமார் ஆறு சுரங்கப்பாதைகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடருக்கு பனிப்பாறை சரிவு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்டமாக கருதப்படுகிறது. இதனிடையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட பல உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாகவும், வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை காரணமாக அவை விரைவாக சிதைவடைந்து வருவதால் ஆழமற்ற குழிகளில் அடக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கியிரோங் மாவட்டத்திலும் இந்தப் பேரிடரின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 39 நாடுகளைச் சேர்ந்த சுமார் 590 வெளிநாட்டினர் நேபாளத்தில் இன்னும் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 323 வெளிநாட்டினர் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் தொடர்புபடுத்தப்படும் இந்தப் பேரிடரால் 90,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
நேபாளத்தின் மலைப்பகுதிகளில் கடந்த இரு தசாப்தங்களாக நீர்மின் திட்டங்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன. உள்நாட்டு மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் இதன் முக்கிய நோக்கங்களாகும்.
செங்குத்தான மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீர்மின் திட்டங்களுக்கு, ஆறுகளில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை கொண்டு செல்வதற்காக நீண்ட சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. இமயமலை ஆறுகளுக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இடையிலான உயர வேறுபாட்டைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கை “முன்னெப்போதும் இல்லாத பேரழிவை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்” என நேபாள பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்துள்ளார். பேரிடரால் ஏற்பட்ட முழுமையான சேதங்களை மதிப்பிடுவது மிகவும் சவாலானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேபாளத்துடனான முக்கிய எல்லைக் கடப்புப் பகுதிக்கு அருகிலுள்ள திபெத் பகுதியில் 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டினரின் நிலைமை தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என சீனா தெரிவித்துள்ளது.
நேபாளப் பகுதியில் சுமார் 100 சீனப் பிரஜைகளைத் தொடர்புகொள்ள முடியாதுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாகுன் திங்களன்று தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுப்பது, அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவாக வெளியிடுவது, மறைந்திருக்கும் அபாயங்களை எதிர்கொள்வது மற்றும் அவசரகால முகாமைத்துவ திறன்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் சீன அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான CCTV தெரிவித்துள்ளது.







