இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ மறுத்துள்ளார்.
மத்திய வங்கியின் தரவுகளை தவறாகப் பயன்படுத்தி பரப்பப்படும் செய்திகள் குறித்து தெளிவுபடுத்திய அவர், கடன்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் காலாண்டு வாரியாக “Debt Bulletin” அறிக்கை மூலமாகவே அரசாங்கத்தினால் பொறுப்புடன் வெளியிடப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் ஜூன் மாத இறுதி நிலவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதற்கென உள்ள நிலையில், உண்மையான தரவுகளை ஆராயாமல் கடன் சுமை பில்லியன் கணக்கில் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அரசு மேற்கொள்ளும் கடன்கள் ரூபாய்களிலான உள்நாட்டுக் கடன்கள் மற்றும் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களிலான வெளிநாட்டுக் கடன்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இதில் நாட்டின் மொத்தக் கடனை அமெரிக்க டாலர்களில் கணக்கிடும்போது கடன் சுமை உண்மையில் குறைந்துள்ளதே தவிர அதிகரிக்கவில்லை.
2025 டிசம்பர் 31 நிலவரப்படி நாட்டின் மொத்தக் கடன் 100.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், அது 2026 மார்ச் மாதத்தில் 98.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. தொடர்ந்து 2026 ஜூன் மாத இறுதியில் இத்தொகை 95.04 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மேலும் குறைந்துள்ளது.
அதேபோல், கடன் சுமை எண்களின் அடிப்படையிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதமாகவும் கணிசமாகக் குறைந்துள்ளது.
2032 ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 95% எனும் கடன் சுமை அளவை இலங்கை ஏற்கனவே 2025 டிசம்பர் மாதத்திற்குள் எட்டிவிட்டதுடன், 2026 ஜூன் மாதமளவில் இந்த சதவீதம் 88.8% ஆக மேலும் குறைந்துள்ளது.
கடன் தொகை எண்களின் அடிப்படையில் மாறுபடுவதும், நாட்டின் கடன் பெறும் திறன் அதிகரிப்பதும் பொருளாதார ரீதியில் இரு வேறுபட்ட விடயங்களாகும்.
எனவே, எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைச் சரியாகப் பகுப்பாய்வு செய்து, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.








