நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலக்கரி இருப்பு குறைந்துள்ளதால், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கு இரண்டு நிலக்கரி கப்பல்கள் விரைவில் வரவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளையும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12ஆம் திகதியும் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், நிலக்கரி இருப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நாட்டின் மின் உற்பத்திக்கு தீவிர சவாலை ஏற்படுத்தியுள்ளதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகோடா தெரிவித்துள்ளார்.







