தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ‘தினன தகுண’ (Dhinana Dakuna) அமைப்பு, கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அவர்கள் அந்த நிதியை மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று (2) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முறைப்பாட்டில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரைவான விசாரணையை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஐந்து முக்கிய காரணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டின் மூலம், தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும், கட்சியின் வங்கிக் கணக்குகளைப் பரிசீலிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.







