தமிழ் மக்களின் தன்மானக் கட்சியாக விளங்குகின்ற தமிழரசு கட்சியை கட்சிகளோ அல்லது சிவில்
அமைப்புகளோ தீர்மானம் எடுத்துவிட்டு வாருங்கள் என பகிரங்கமாக அழைப்பு விடுத்தாலும் செல்ல
மாட்டோம் என தமிழரசு கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.
புதன்கிழமை வலி தெற்கு பிரதேச சபை வளாகத்தில் அமரர் தர்மலிங்கத்தின் 41வது நினைவு தின
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழரசு கட்சி தமிழ் மக்களின் தன்மானத்தின் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட தனித்துவமான பழம்பெரும் கட்சியாகும்.
தமிழரசு கட்சியின் தனித்துவம் தன்மானம் எந்த இடங்களில் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறதோ அந்த
இடங்களில் தமிழரசு கட்சி பிரசன்னமாகாது இது எங்களின் உறுதியான நிலைப்பாடாகும்.
பழம்பெரும் கட்சியான தமிழரசு கட்சியை தனிமைப்படுத்தி அல்லது ஓரங்கட்டி தீர்மானம் ஒன்றை எடுத்துவிட்டு பகிரங்க அழைப்பு மூலம் வாருங்கள் என்று அழைத்தால் எவ்வாறு செல்ல முடியும் செல்லவும் மாட்டோம்.
தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல அதற்கென தனித்துவம் இருக்கிறது அதனை
சக தமிழ் கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழரசுக் கட்சியை வழிநடத்தியவர்கள் முதுகு வளைந்தவர்கள் அல்ல முதுகை நிமிர்த்தி தமிழ்
மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் நாங்களும் வளைந்து செல்ல முடியாது.
ஆகவே எங்களை மதித்தவர்களிடத்து கீழ இறங்கி செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்
மதியாதவர்களிடம் ஒரு படி மேலே சென்று செயல்படுவதற்கும் தயாராக இருக்கிறோம் இதனை நான்
ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்








