பொது சுகாதாரத் துறையில் இலங்கை ஈட்டியுள்ள இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது.
திமோர்-லெஸ்தேயின் தலைநகர் டில்லியில் நடைபெறும் WHO தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது மாநாட்டில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் குறித்த சான்றிதழ் கையளிக்கப்பட்டுள்ளது.
WHO பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் சார்பில் வழங்கப்பட்ட இந்தச் சான்றிதழில், WHO தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகப் பொறுப்பதிகாரி வைத்தியர் நிலேஷ் புத்தாவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை 2016ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக WHO-வினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் மலேரியா மீண்டும் பரவாத வகையில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, அந்த நிலை தொடர்ந்து பேணப்பட்டமைக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவுக்கு அடுத்ததாக தென்கிழக்காசிய பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடாக இலங்கை திகழ்கின்றது.
அதேபோன்று, தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கும் டெட்டனஸ் நோயை ஒழித்து, கடந்த ஒரு தசாப்தமாக அந்த நிலையை தொடர்ந்து பேணி வந்தமையும் WHO-வினால் பாராட்டப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி திட்டங்களை நாடு முழுவதும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியமை, வலுவான முதன்மை சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு, அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நோய் கண்காணிப்பு முறைமை ஆகியவை இந்த சாதனைகளை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக WHO சுட்டிக்காட்டியுள்ளது.








