இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதாக பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் உத்தியோகபூர்வ அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்படும் போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் இயங்கும் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களிடம் பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் சந்தேகத்திற்கிடமான பொலிஸ் அறிவித்தல்கள் அல்லது விளம்பரங்கள் காணப்பட்டால், அவற்றை உறுதிப்படுத்தாமல் பகிர்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








