ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிவேகமாகவும் தலைக்கவசமின்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நள்ளிரவு சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர், ஹொரணை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பியபோதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த நபர் செயலி மூலம் பெற்ற மோட்டார் சைக்கிளில் வகவத்த பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாக பயணித்துள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்றபோது முன்னால் பயணித்த நபர் ஒருவர் சம்பவத்தை அவதானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இரவு நேரத்தில் விபத்து இடம்பெற்றதால், சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கவில்லை. பின்னர் காலையில் வீதியால் சென்ற நபர் ஒருவர் விபத்தை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








