அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டில் சுமார் பாதியாகக் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2025ஆம் ஆண்டு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சத்து 39,917 பயனாளிகள் காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் அந்த எண்ணிக்கை 12 இலட்சத்து 51,522 ஆகக் குறைந்துள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கைக் குறைப்பு உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மறுகணக்கெடுப்பு மற்றும் பயனாளர்களின் தகுதி மறுசான்றிதழ் நடவடிக்கைகளே பயனாளிகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களுக்கான மறுசான்றிதழ் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அவை செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மிகவும் ஏழ்மையானோர், ஏழ்மையானோர், நலிவடைந்தோர் மற்றும் இடைநிலைப் பிரிவினர் என நான்கு பிரிவுகளுக்கு அஸ்வெசும நிவாரணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மிகவும் ஏழ்மையானோர் மற்றும் ஏழ்மையானோர் ஆகிய இரு பிரிவினருக்கு மாத்திரமே நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.








